தொழிலுக்கு ஆண்-பெண் என்கிற பேதமெல்லாம் இல்லை. திறமையும் உழைப்பும் மட்டுமே இங்கே வெற்றியை நிர்ணயிக்கின்றன.
ஓலா,ஊபர் போன்ற பெருநிறுவனங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற கார் சேவைத் துறையில் துணிச்சலுடன் நுழைந்து, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து பயணம் செய்யும் கார் மற்றும் பைக் பூலிங்(CAR AND BIKE POOLING) தொழிலைக் கையில் எடுத்து வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் ஆராதனா, நான்சி மார்ட்டின்,சரிதா மிஷ்ரா ஆகிய மூன்று பெண்கள்.
பூல் டூ(POOLTOO) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஆறுமாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் தேவிகா கணேஷ் என்ற முதலீட்டாளர் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்.
அதிலும் பகிர்ந்து பைக்கில் பயணம் செய்யும் திட்டம் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்டதாம். தொழில் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களுக்குள் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு இப்படி ஒரு பெரும்நிதி கிடைத்திருப்பது தொழில் உலகத்தில் ஆச்சர்ய அலைகளை உண்டாக்கியிருக்கிறது.
பூல் டூ நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது?
யாருக்கெல்லாம் கார்,அல்லது பைக் சேவை தேவைப்படுகிறதோ, அவர்கள் முதலில் இந்த பூல் டூ தளத்திற்குள் நுழைந்து தங்களுடைய செல்பேசி எண், தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிய வேண்டும்.
பிறகு தாங்கள் தினமும் எந்தப் பாதையில் பயணம் செய்கிறோம், என்ன மாதிரியான பூலிங் சேவை (கார் அல்லது பைக்) தேவைப்படுகிறது என்பனபோன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும்.
அதேபோல் யார் தங்களுடைய வாகனப் பயணத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்களோ அவர்களும் தங்களைப் பற்றிய குறிப்புகள் மற்றும் தினமும் அவர்கள் தங்கள் வாகனத்தில் எந்த இடத்திலிருந்து கிளம்பி எந்த இடத்தை அடைவார்கள் என்பதுபோன்ற தகவல்களையும் குறிப்பிடவேண்டும்.
இதன் அடிப்படையில் பூலிங் சேவை தேவைப்படும் நபரை தங்களுடைய கார், அல்லது பைக் பயணத்தில் சேர்த்துக்கொள்ள ஒருவர் விருப்பப்பட்டால் இந்தப் பயணத்திற்கு ஆகும் பணத்தை பூலிங் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் நபர் பயணத்திற்கு முன்பாகவே பூல் டூ தளத்தில் கட்டிவிடவேண்டும்.
பணத்தைக் கட்டியவுடன் பூல் டூ தளம் குறிப்பிட்ட குறீயிட்டு எண்ணை பைக் அல்லது கார் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளப் போகும் நபருக்கு அனுப்பி வைக்கும்.
இந்த எண்ணை அவர் பூல் டூ தளத்தில் பதிவிட வேண்டும். அந்த நிமிடத்திலிருந்து எந்த இடத்திலிருந்து அந்தப் பயணம் ஆரம்பிக்கிறது, எந்த இடத்தில் முடிகிறது என்பதை பூல் டூ தளம் கண்காணிக்கும்.
பயணம் முடிந்ததும், எந்த நபர் தன்னுடைய கார் மற்றும் பைக் பயணத்தை பகிர்ந்துகொண்டாரோ அந்த நபருக்கு பூல் டூ நிறுவனம் அதற்கான பணத்தை வழங்கிவிடும்.
குறுகிய கால வளர்ச்சி
பூல் டூ நிறுவனம் இப்போதுவரை 25,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பயனாளிகளைக் கொண்டிருக்கிறது. 5000 வாகன உரிமையாளர்கள் இந்த சேவையில் இணைந்துள்ளனர். இந்த பூல் டூ நிறுவனத்தின் மூலமாக தினமும் 300 சவாரிகள் நடக்கின்றன.
தொடக்கத்தில் டெல்லியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற பல நகரங்களில் தனது சேவையை விரிவுபடுத்தி இருக்கிறது.
வாடகையைப் பகிர்ந்துகொள்ளும் நடைமுறையைக் கொண்டுள்ள ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் நிச்சயம் ஒரு சவாலாகத்தான் உருவெடுக்கும். ஆனால் இந்த சவாலும் போட்டியும் செய்யப்போவதெல்லாம் நன்மைகளைத்தான்….சுற்றுச்சூழலுக்கு நன்மை, பாக்கெட்டுக்கு வளமை என்று!
-ராகவன்.