இன்றைய வணிக உலகில் அயல்நாட்டு முதலீடுகளின் முக்கியத்துவத்தை அறியாதவர்களே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, இந்திய மாநிலங்கள் முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தங்களுக்கு சாதகமான மாநிலத்தைத்தேர்ந்தெடுத்து அங்கு வெளிநாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்கின்றன.
அவர்கள் வணிகம் செய்ய ஏதுவான சூழல் தங்களிடம்தான் இருக்கிறது என்று சந்தைப்படுத்தும் பணியை கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மாநிலங்கள் செய்துவருகின்றன. தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா (தெலங்கானா பிரிந்து செல்வதற்கு முன்பு) ஆகிய மாநிலங்கள் இவ்வாறு முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டியாளர்களாக விளங்கிவருவதை இந்த 20 ஆண்டுகால வரலாறு சொல்லும்.
முதலீடுகளை ஈர்ப்பதில் நன்கு பட்டறிவைச் சேகரித்துவைத்திருக்கும் தமிழகம், அவ்வப்போது முதலீட்டாளர் மாநாடுகளை நடத்திவருகிறது. அந்த வகையில் இம்மாதம் 7, 8 தேதிகளில் பிரம்மாண்டமான ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை’ தமிழகம் நடத்திக் காட்டியது.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 9 நாடுகள் பங்குதாரர்களாகப் பங்கேற்றன. 50 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டன. இரண்டு நாள் நிகழ்வுகளின் நிறைவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் வாயிலான 14 லட்சம்பேருக்கு மேல் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுவர். 12 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பைப் பெறுவர். மின்னணுவியல், காலணி உற்பத்தி, பசுமை எரி ஆற்றல், தகவல் தொழில்நுட்பம் முதலிய பல்வேறு துறை சார்ந்த முதலீடுகள் தமிழகத்துக்கு வரவிருக்கின்றன.
இத்தோடு நில்லாமல் வரும் 28 ஆம் தேதி முதல்வர் தலைமையிலான குழு, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளைப் பெற உள்ளதாகவும் தெரிய வருகிறது.
தமிழகத்தொழில் துறையின் வரலாற்றில் இம்மாநாடு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இதற்கு உழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்ன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இதர துறையினர், அரசு அலுவலர்கள், தனியார் தொழில் துறையினர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
அதேவேளையில், இந்த ஒப்பந்தங்கள்மூலம் கிடைக்க இருக்கும் வேலைவாய்ப்புகளில் 50% அளவுக்காவது உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர் சட்டங்களை மதித்துப்பின்பற்ற ஆவன செய்ய வேண்டும் என்றும் முனைவு கேட்டுக்கொள்கிறது.