கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 2020 ஜூன் 30-ம் தேதி வரை சென்னை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள எல்லைகளை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஊரடங்கு காலத்தில், திருமலா, ஹெரிடேஜ், டோட்லா மற்றும் ஜெர்சி ஆகிய முன்னணி தனியார் பால் நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முறையான இ-பாஸ் வசதி இல்லாததால், பால் விநியோகஸ்தர்களுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்க மறுப்பதாகத் தெரிகிறது.
இ-பாஸ் கோரி விண்ணப்பித்திருந்த பால் விநியோகஸ்தர்களின் 6 நாள் காத்திருப்புக்கு பின்பு இ-பாஸ் நிராகரிப்பட்டதாக தகவல் வந்துள்ளது. “இரு சக்கர வாகனங்களில் செல்ல இ-பாஸ் வழங்க முடியாது.
விநியோகஸ்தர்களின் பயணத்திற்கு அந்தந்த நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னணி தனியார் பால் நிறுவனங்களால் பால் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இரண்டு சக்கர வாகனங்களில் சென்று பால் விநியோகம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டுமென்றும் அல்லது பால் நிறுவன ஊழியர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து, அவர்கள் பயணிக்க அனுமதி வழங்க வேண்டுமென்றும் தனியார் பால் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.