’எதிர்நீச்சல்’ மாரிமுத்து காலமானார்

’எதிர்நீச்சல்’ மாரிமுத்து காலமானார்

பிரபல நடிகரும் ‘எதிர்நீச்சல்’ தொலைக்காட்சித் தொடரின் எதிர் நாயகனுமான நடிகர் மாரிமுத்து தற்போது காலமானார். இரண்டு திரைப்படங்களை (கண்ணும் கண்ணும், புலிவால்) இயக்கியுள்ள மாரிமுத்து,  பரியேறும் பெருமாள், ஜெயிலர் முதலிய பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார் மாரிமுத்து. பாடலாசிரியராகவும் இயங்கியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, ராஜ்கிரண், வசந்த் , எஸ்.ஜே சூரியா, மணிரத்னம் உள்ளிட்ட பலரிடமும் உதவியாளராகப்  பணிபுரிந்து நெடிய அனுபவத்தைச் சேர்த்தவர் அவர்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ‘ஆதி குணசேகரன்’ என்ற பாத்திரத்தில் அவர் உலகப்புகழ்பெற்றுவிட்டார்.

 

சமூக ஊடகங்களில் ‘இந்தாம்மா…எம்மா ஏய்…’ என்ற அவரது வசனம் மிகப்பிரபலம் பெற்றுவிட்டது. அந்த நாடகத்தில் அவர் பயன்படுத்திய பல வசனங்கள் அவரது சொந்த கற்பனைத்திறனிலிருந்து வெளிவந்தவை. அவரது யதார்த்த நடிப்பு, அவரது அனுபவத்தின் சாரம்.

தேனி மாவட்டத்தின் பசுமலைத்தேறி என்ற கிராமத்தைச் சேர்ந்த எளிய பின்னணியிலிருந்து வந்தவர் மாரிமுத்து. தனது தொழில் பக்தி, கடும் உழைப்பால் மட்டுமே அவர் இத்தகைய வளர்ச்சியையும் புகழையும் பெற்றார் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

இன்று காலை 6 மணிக்கு தொலைக்காட்சி தொடருக்கான டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.

முற்போக்காளரும் பகுத்தறிவாளருமான மாரிமுத்து, மூடப்பழக்க வழக்கங்களை ஊடகங்களில் பகிரங்கமாகச் சாடிவருபவர். இது, அவரது இன்ன்னொரு முகத்தை உலகுக்குக் காட்டியது.

இந்த செய்தி சின்னத்திரை, திரையுலகினர், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள், கவிஞர்கள், ,கலைஞர்கள் என்று அனைவரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அவரது மறைவுக்கு முனைவு, ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறது. தான் சார்ந்த தொழில்துறையை நேசிப்போருக்கு மாரிமுத்து என்றும் ஓர் உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்வார்.

அதேபோல, தொழில்துறையினர் தங்களது உடல்நிலையை மிகவும் கவனமாகக் காப்பாற்றிப் பேண வேண்டும் என்ற செய்தியையும் மாரடைப்பால் காலமான திரு.மாரிமுத்து அவர்களின் இழப்புச்செய்தி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

-தமிழ்.

(புகைப்படம்: ஸ்டீவன் ஸ்கால்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *