புதிய தொழில்முனைவோருக்கும் சிறுதொழில் துறையினருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கை எந்த அளவுக்கு சாதகம்? இதோ, சிறு அலசல்!
தி.மு.க.வின் வாக்குறுதிகள்:
*நடுத்தர, பெருந்தொழில் நிறுவனங்கள் தொடங்க முன்வருவோருக்கு 5 ஆண்டுகளுக்கு வரி கிடையாது.
*அதுபோன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர் எண்ணிக்கையில் 75% ஐ தமிழக இளைஞர்களாக இருக்கும் வகையில் வேலை அளித்தால், 8 மாத சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை அரசே வழங்கும் (ஒரு முறை மட்டும்).
*நலிவடைந்த சிறு தொழில்களைப் புனரமைக்க ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் வல்லுநர் குழு உருவாக்கப்படும்.
*மூலப்பொருட்களை குறைந்த விலையில் வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவி.
*அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம்
*தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு 100 நாட்களுக்குள் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி. அவ்வாறு அனுமதி கிடைக்க தாமதமானாலும் தொழிலைத்தொடங்கிக்கொள்ளலாம். அனுமதி அளிக்கப்பட்டதாகவே பொருள்.
*கொங்கு மண்டலத்தில் பிளாட்டினம் அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கப்படும்.
*சர்க்கரை ஆலைகளுக்கு 10% வரை எத்தனால் உற்பத்திக்கு அனுமதி
*கன்னியாகுமரியில் ரப்பர் தொழிற்சாலை தொடங்கப்படும்.
*அரசு, பொதுத்துறை கொள்முதலில் 15% சிறு ,குறு தொழிற்சாலைகளிடமிருந்தே வாங்க நடவடிக்கை. விலைப்புள்ளியில் 10% விலைச்சலுகை.
*மதுரை-தூத்துக்குடி வரையிலான பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
*மதிப்புக்கூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்மூலம் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர்.
*புதிய தொழில் தொடங்க முன்வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரப்படும்.
*குறுந்தொழில்களுக்கு குறைந்த வட்டியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி (ரூ.25 லட்சம்வரை) வழங்கப்படும்.
*கோவையில் வார்ப்பட நிறுவனம், திண்டுக்கல், வேலூர், சென்னையில் தோல்பொருள் பூங்கா தொடங்கப்படும்.
*கிருஷ்ணகிரி, நத்தம், திண்டுக்கல் பகுதிகளில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
*கோழிப்பண்ணை அமைக்க ஊராட்சி ஒன்றிய அளவில் அனுமதி
*தமிழகத்தில் விமான உதிரிபாக தொழிற்சாலை தொடங்கப்படும்.
*மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி.ஐ.களில் பயிற்சி அளித்து மானியத்துடன் கடன் வசதி தரப்படும்.
*சிறு வியாபாரிகளுக்கு ’வணிகர் சுய உதவிக்குழுக்கள்’ அமைக்கப்படும்.
*ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த ஆட்டோ வாங்க ரூ.10000 மானியம்.
*இருபத்தைந்து லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி.
*புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு உறையுள் மையங்கள் (incubation centres) தொடங்கப்படும். முதலீட்டாளர் சந்திப்பு, கடனுதவி வழங்கப்படும்.
*1 லட்சம் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி தந்து சுய தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.
முனைவின் பார்வையில்:
சாதகம்:
*புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு அடைகாப்பகங்கள் (incubation centres) உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது நல்ல அறிவிப்பு. பாராட்டத்தக்க அறிவிப்பு.
*ரூ.1 லட்சம் வீதம் 1 லட்சம் பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி என்பது குறுந்தொழில் முனைவோருக்கு பயனளிக்கும்.
* குறுந்தொழில்களுக்கு குறைந்த வட்டியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி (ரூ.25 லட்சம்வரை) வழங்கப்படும் என்பது சிறப்பான அறிவிப்பு.
*மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அதை உணர்ந்து இளைஞர்களுக்கு மதிப்புக்கூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்மூலம் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர் என்ற அறிவிப்பை முனைவு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.
* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரப்படும் என்பது மிகச்சிறப்பான அறிவிப்பு.
விமர்சனம்:
*புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்ட தொழில்முனைவோர் மையம் போன்ற அமைப்புகள் உருவாக்குவது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
*தொழில்முனைவோரைத் துன்புறுத்தும்
சிவப்பு நாடா நடைமுறைகள், கையூட்டு ஆகியவற்றை ஒழிப்பது குறித்து வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கலாம்.
*சிறுதொழில், பெருந்தொழில்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை புதிய தொழில் முனைவோருக்கும் (காப்புரிமை செய்ய உதவி, தொழிற்சாலை, அலுவலக மனை ஒதுக்கீடு, ஏற்றுமதி தொழில் முனைவோர் ஆகியவை) கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் சிறுதொழில் துறைமீதும் முதலீட்டாளர்கள்மீதும் கவனம் கொண்டதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கிறது.