உலகம் முழுவதிலுமே மக்கள் அனைவரும் QR குறியீடுகள் (ஜி பே, பே டி எம் முதலியவை மூலம்) மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கையில் ரொக்கம் இல்லாமல் (வங்கியிருப்பு மூலம்) கட்டணம் செலுத்த பழகிவிட்டார்கள்.
கல்வியறிவு கிடைக்கப்பெறாத எளிய சாலையோர வணிகர்கூட இந்தக் கலாச்சாரத்துக்குப் பழகிவிட்டார்கள். அந்த அளவுக்கு நம்மவர்கள் தொழில்நுட்பத்தில் கலக்குகிறார்கள்.
தொழில்நுட்பம் எப்போதும் முற்றுப்பெறாதே! தொடர்கதையாயிற்றே அது…இப்போது க்யூ ஆர் வழி பணம் செலுத்துதல் இன்னும் எளிமையான முறையில் நடக்க போகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆமாங்க, வெறும் கை அசைத்தால் போதும் பணக்கட்டணம் செலுத்த முடியும்.
நம்ப முடியவில்லை இல்லையா!
ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். அப்படி ஒரு தொழில்நுட்பம் வந்துவிட்டது.
கடந்த மே 21 அன்று, சீனாவின் மிகப் பெரிய நிறுவனமான டென்சென்ட் WeChat Palm Payment என்ற முறையை அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்திவிட்டது. டாக்சிங் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனில் சுரங்கபாதையில் பயணம் செய்பவர்கள் இந்த தொழில்நுட்ப வசதியை இப்போது பயன்படுத்துகின்றனர்.
எப்படி இது இயங்குகிறது தெரியுமா?
பயணிகள் அவர்களது உள்ளங்கை அடையாளத்தை இதற்கென்று ஒரு நியமிக்கப்பட்ட கணினியில் பதிவு செய்த பிறகு அதை கட்டணத் தகவலுடன் இணைக்க வேண்டும் . பின்னர் பச்சை நிற வளையத்துடன் கூடிய டர்ன்ஸ்டைலில் உள்ள ஸ்கேனரில் ‘நான் ஹாஜர் ‘ என்ற தோரணையில் கையை அசைத்து காட்ட வேண்டும். அப்போது அது WeChat கணக்கு மூலமாக தானாகவே கட்டணம் செலுத்தப்படும் . இப்படி பணமோ , கார்டோ எதுவுமில்லாமலே விரைவாகவும் மிக சுலபமாகவும் பணம் செலுத்தி பயணத்தை தொடங்கலாம் .
பணம் , கார்டு போன்றவற்றை பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய தொல்லைகள் இனி இல்லை, கடவுச்சொல்லை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பிரச்சனையும் இல்லை . முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்த வித தொல்லைகளின்றி பயணம் செய்யலாம் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். .
இருப்பினும், பயோமெட்ரிக் தரவுகள் ஹேக் செய்யப்படலாம் என்ற அச்சமும் சிலரில் உள்ளது . நிபுணர்கள் இதைப்பற்றி கூறுகையில், “இந்த பாம் பேமெண்ட் முறை மிகவும் பாதுகாப்பானது .. இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் இனிதான் அதிகரிக்கப்படவேண்டும்.
இரண்டாவது, இந்தத் தொழில் நுட்பம் உள்ளங்கை அடையாளத்தை மட்டுமல்லாமல் நரம்புகளின் வடிவத்தையும் படம்பிடிக்கிறது . அதனை நகலெடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம் என்பதால் இது மிக பாதுகாப்பான முறை என்று தாரளமாகச் சொல்லலாம் “என்கின்றனர் தொழில் நுட்ப நிபுணர்கள் .
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(Image by Gerd Altmann from Pixabay)