மும்பை, நவ.25: வேளாண் துறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி விவசாயிகளுக்காக சேவையாற்றிவரும் அக்ரோ ஸ்டார் என்ற புனேவைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனம் ரூ.268 கோடி நிதி திரட்டியுள்ளது. சுற்றுச்ச்சூழல் சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவித்து முதலீடு செய்யும் ஜஸ்ட் கிளைமேட் அமைப்பு இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
கிடைத்துள்ள முதலீட்டை அக்ரோ ஸ்டார் நிறுவனம், தனது விரிவாக்கம், புதியன கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன்களை வலுப்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் சிதான்ஷூ, ஷர்துல் சேத் ஆகியோரால் கூட்டாகத் தொடங்கப்பட்டதே அக்ரோ ஸ்டார் நிறுவனம். தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைக் கொண்டு விவசாயிகளுக்கு தரமான வேளாண் இடுபொருட்களை வழங்குவது, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.
10 ஆயிரம் கடைகள் மூலமாக 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் தொடர்பில் இருந்துகொண்டு அவர்களுக்கு சேவையாற்றுவதாக அக்ரோஸ்டார் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம், ஆக்ஸல் இந்தியா நிறுவனத்திடமிருந்து ரூ.60 கோடியை முதலீடாகப் பெற்றது.
-தமிழ்.
(முகப்புப் படம்: நன்றி: Bishnu Sarangi from Pixabay)





