“இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை இருபதாயிரம் என்று துறை சார்ந்த புள்ளி விபரங்கள் சொல்கின்றன.
ஆனால் இந்தப் புள்ளிவிவரத்தையும் தாண்டி இந்தியாவில் ஏராளமான ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நான் கண்கூடாக நான் பார்க்கிறேன்.
இது மிகவும் ஆரோக்கியமான போக்காக எனக்குப் படுகிறது” என்று மத்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் கோவாவில் புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கான இரண்டுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவா அரசு நடத்திய இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு தங்களுடைய அரசு என்ன மாதிரியான வசதிகளை அளிக்கவுள்ளது என்பதனை அம்மாநில தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரோகன் கவுண்டே கூட்டத்தில் விளக்கியிருக்கிறார்.
“நம்முடைய நாட்டில் ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோர் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருகிறார்கள் என்பதனை நாடுமுழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு அறிந்துகொண்டேன்.
சமீபத்தில் குஜராத் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது பதினேழு முதல் பதினெட்டு வயதைச் சேர்ந்த இளைஞர்கள் நிறையப் பேரைச் சந்தித்தேன். அவர்களின் தொழில் சார்ந்த எண்ணங்களையும் திட்டங்களையும் கண்டு நான் வியந்துபோனேன்.
வரும்காலத்தில் அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன” என்று சொல்லியிருக்கும் மத்திய அமைச்சர் ஒருபக்கம் இப்படி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் புதிதாகத் தொடங்கப்படும் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூடுவிழா காணும் சூழ்நிலையும் உண்டாகிறது என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
“குறிப்பாக சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தொடர்ந்து இயங்க முடியாமல் மூடுவிழா கண்டு விடுகின்றன. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க நாம் அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும்” என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதில் மிகவும் வியக்கத்தக்க செய்தி என்னவென்றால், கடந்த ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் 36 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.
இந்த வளர்ச்சி இன்னும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் பதினான்கு பில்லியன் டாலர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது” என்றும் அமைச்சர் சுரேஷ் பிரபு பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.
-பாலாஜி.