கடன் அட்டைச் சுழலிலிருந்து மீள வேண்டுமா?

கடன் அட்டைச் சுழலிலிருந்து மீள வேண்டுமா?

என்னதான் திட்டம்போட்டு இந்தக் கடன் அட்டையைக் காலி செய்துவிட வேண்டுமென்று நினைத்தாலும் அதுவும் நம்மை விட மாட்டேன் என்கிறது. நாமும் அதனை விட மாட்டோம் என்கிறோமே…இந்த அடிமைப் பழக்கத்துக்கு ஒரு விடிவே கிடையாதா என்று ஏங்குகிறீர்களா? உங்களுக்காக சில ஆலோசனைகள்.

*பொதுவாக கடன் அட்டைகள் 3 ஆவது வாரத்தில் தங்கள் அறிக்கைகளைத் தயாரிக்கும். எடுத்துக்காட்டாக, 22 ஆம் தேதி தயாரிக்கப்படும் ஒரு கணக்கு அறிக்கைக்கு நீங்கள் அடுத்துவரும் 8 ஆம் தேதி பணம் செலுத்தியாக வேண்டும். ஆக, இந்த 15-16 நாட்களுக்குள் உங்களால் பணத்தை ஏற்பாடு செய்து முழு நிலுவைத்தொகையையும் செலுத்த முடியா என்று பாருங்கள். அவ்வாறு செலுத்தும் ஆற்றல் இருந்தால் உங்களுக்கு கடன் அட்டையால் பிரச்சனை ஏதுமில்லை.

*தவிர்க்கவே முடியாத சூழலில் குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்துவது பரவாயில்லை. ஆனால், விரைவாக மீதமுள்ள தொகையைச் செலுத்திவிட  வேண்டும். அது முடியுமா? முடியாது என்றால் கடன் அட்டை சகவாசம் உங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

*எப்படியோ கடன் அட்டைச் சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டீர்கள். இதற்காக ஆண்டுக்கு 24%-30% வரை (ஏ.டி.எம்மில் கடன் அட்டையை வைத்துப் பணம் எடுத்திருந்தால் 40% வட்டி என்பதை மறக்காதீர்கள்). வட்டி செலுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் கடன் அட்டையை ஒழித்துக்கட்டிவிட்டு வெளியே வாருங்கள்.

*அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? நண்பர்கள், உறவினர்களிடம் வட்டியில்லாக் கடன் கிடைக்கிறதா என்று கேளுங்கள். கிடைத்தால் உடனடியாக அதனை வைத்து கடன் அட்டையின் முழுக்கடனையும் அடைத்துவிட்டு ஒரு கும்பிடு போட்டுவிடுங்கள்.

*சிலருக்கு சீட்டு போடும் பழக்கம் இருக்க்கும். அந்த வாய்ப்பு உஙகளிடம் இருந்தால் ஓரளவுக்கு தள்ளு தொகை சாதகமாக இருக்கும்போதே சீட்டை எடுத்து விடுங்கள். கடன் அட்டைக்கடனைக் கட்டிவிடுங்கள். சீட்டுக்கடனுக்கு பெரிய வட்டி கிடையாது. எனவே உங்களுக்கு நட்டம் வராது.

*சம்பளம் பெறும் ஊழியராக நீங்கள் இருந்தால் 10.5% வட்டி வீதத்தில் தனி நபர் கடன் பெற வங்கிகளில் உங்களுக்கு வாய்ப்புண்டு. அதனைப்பயன்படுத்தி கடன் வாங்கி, கடன் அட்டை நிலுவையைச் செலுத்தி மீண்டு வரலாம்.

*கைவசம் தங்க நகைகள் இருந்தால் அடமானம் வைத்தும் கடன் பெறலாம். அப்பணத்தை வைத்து நிலுவையைச் செலுத்துங்கள். 11 மாதங்களுக்குள் நகையைத் திருப்பிவிட வேண்டும். எனவே, கையில் பணம் இருக்கும்போதெல்லாம் நகைக்கடனுக்கான தவணையைச் செலுத்தி அதிலிருந்தும் மீண்டுவிடலாம்.

*கடன் அட்டை வைத்து, மேலாண்மை செய்வது ஒரு நிதிசார் ஒழுக்கம் சார்ந்த விஷயம். அது கைகூடும்வரை அந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *