மும்பை, நவ.7: பிரபல பங்குத்தரகு நிறுவனமான குரோ, பங்கு வெளியீட்டில் இறங்கியிருக்கிறது. புதிய பங்கு விற்பனையின்மூலம் மட்டும் ரூ.1060 கோடி திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. பங்கு ஒன்றின் விலை ரூ.95-100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்துவருகின்றன. சில்லரை முதலீட்டாளர்கள் (பொதுமக்கள்) குறைந்தபட்சம் 150 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது சுமார் ரூ.15,000. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இம்மாதம் 10 ஆம் தேதி பங்குகள் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும். இப்பங்குகள் எதிர்வரும் 12 ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். இப்பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.11) கடைசி நாள் ஆகும்.
பங்கு வெளியீட்டின்மூலம் திரட்டப்படும் தொகையை நிறுவனத்தின் பெயரைப் பிரபலப்படுத்துதல், அடிப்படைக்கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்த உள்ளதாக குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னணி பங்குச்சந்தை தரகு நிறுவனமான குரோ, இன்றைய நிலையில் 1.2 கோடி வாடிக்கையாளர்களைக் கைவசம் வைத்திருக்கிறது. பங்குத்தரகு நிறுவனத் துறையில் 26% பங்கை இந்நிறுவனம் வகிக்கிறது.
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை இடர்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும்முன்பு தொடர்புடைய ஆவணங்களைப் படித்துவிட்டு, ஆலோசகர்களின் ஆலோசனைபெற்ற பின் முடிவெடுக்கவும்).
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.





