சமுதாய வானொலி தொடங்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?: ’கடல் ஓசை’ வானொலி காயத்ரி உஸ்மான் விளக்கம்

சமுதாய வானொலி தொடங்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?: ’கடல் ஓசை’ வானொலி காயத்ரி உஸ்மான் விளக்கம்

சென்னை, மே 19: சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, கடந்த 9 ஆம் தேதிமுதல் எதிர்வரும் 22 ஆம் தேதிவரை  கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காகப் பல்வேறு இலவசப்பயிற்சிகளை வழங்கிவருகிறது. 14 நாட்களில் 14 தலைப்புகளில் 60 ஆளுமைகள், 60 தலைப்புகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துவருகின்றனர். அவ்வகையில் நேற்று (மே 18) சமுதாய வானொலி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ’கடல் ஓசை’ சமூக வானொலியின் நிர்வாக இயக்குநர் காயத்ரி உஸ்மான் பயிற்சிகளித்தார். அப்போது அவர் அளித்த முக்கியக் குறிப்புகளிலிருந்து…

“இது வீடியோக்களின் காலம். ஆனால், எதற்கும் ஒரு காலாவதி தேதி இருக்கிறதே…அவ்வகையில் இன்னும் 10 ஆண்டுகளில் காணொளிகளைக் காண்பதில் மக்கள் அயர்ச்சியடைந்துவிடுவர். அப்போது வானொலித்துறைக்கு நல்ல கவனம் கிடைக்கும். உலகில் முதன்முதலில் வானொலி சேவை உருவாக்கப்பட்டதே மீனவர்களுக்கு வழிகாட்டத்தான். பிற்பாடுதான் வர்த்தக வானொலி சேவைகள் உருவாக்கப்பட்டன. படிப்படியாக ஏ.எம், எம்.டபிள்யூ, எஃப்.எம், எஸ்.டபிள்யூ என்று அலைவரிசைகள் உருவாகின. இன்று பாட்காஸ்டிங் துறை வளர்ந்துவருகிறது. அது, ஒருவர் அல்லது இருவரின் கருத்தை நேயர்க்ளுக்குக்கொடுப்பது. ஆனால் வானொலி, பலரையும் திருப்திப்படுத்த வேண்டிய ஊடகம். பாடல், கதை, செய்தி, இடையே விளம்பரங்கள் என்று எல்லாம் வரும்.

சமுதாய வானொலி என்பது முற்றிலும் மாறுபட்டது. ‘மக்களால்…மக்களுக்காக’ என்பதே அதன் தன்மை ஆகும். சேவை நோக்கத்தோடுதான் சமுதாய வானொலியைத்தொடங்க முடியும். வேளாண்மை, கல்வித்துறைகளுக்கு நீங்கள் சமுதாய வானொலியைத் (தனி நபர்கள் அல்லர்…நிறுவனங்கள்மட்டுமே தொடங்க முடியும்) தொடங்கி நடத்த முடியும். அதேபோல, தொண்டு நிறுவனங்களும் சமுதாய வானொலியைத் தொடங்கி நடத்தலாம். விளம்பரங்கள் வாங்கக்கூடாது என்று எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், வானொலியின் நோக்கம், சமூக நோக்கமாக-பொது நோக்கமாக இருக்கவேண்டும்.

அவ்வகையில் 2004ல் அண்ணா பல்கலைக்கழகத்தின் அண்ணா சமூக வானொலி, தமிழகத்திலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டது. எங்களது கடல் ஓசை வானொலி, 2016ல் ஒரு தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 20 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களுக்கு இதன்மூலம் சேவை செய்ய முடியும். 20கி.மீட்டரைத்தாண்டினால் அடுத்த கலாச்சாரம் வந்துவிடும் அல்லவா…எனவேதான் அரசு, இதற்கான வரம்பை வைத்திருக்கிறது. அதேவேளையில் இணைய வழியாக உலகமெங்கும் உள்ள நேயர்கள் எங்கள் நிகழ்ச்சிகளைக்கேட்க முடியும்.

இன்றைய நிலையில் தமிழகத்தில் 50 சமுதாய வானொலிகள் செயல்பட்டுவருகின்றன. சென்னையில் எம்.ஓ.பி வைணவக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, தென்றல் வானொலி ஆகியவை இயங்குகின்றன. சமூக வானொலிகள் 4 மணி நேரம் குறைந்தபட்சம் இயங்கவேண்டும். அதில் 2 மணி நேர நிகழ்ச்சி புதிதாக (fresh content) இருக்க வேண்டும். 2 மணி நேரம், பழைய-முன்பே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாக இருக்கலாம்.

சமுதாய வானொலி தொடங்க விரும்புவோர் ஒலித்தரத்துக்காக அடாசிட்டி, பேண்ட் லேப், அடோப்,  நியூ எண்டோ, லாஜிபுரோ, ஃபர்ஸ்ட் கட் ப்ரோ முதலிய மென்பொருட்களைக் கற்றுக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். சமுதாய வானொலி தொடங்க ரூ.15 லட்சம் செலவாகும். அதில் ரூ.10 லட்சத்தை ஒன்றிய அரசு மானியமாகத் தந்துவிடுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

-கா.சு.துரையரசு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *