சென்னை, ஏப்.4: புகழ்பெற்ற திரைப்பட நடிகரான ரவிக்குமார், சென்னையில் இன்று (ஏப்.4) காலமானார். 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இயங்கிவந்த அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.
‘அவர்கள்’ படம் மூலம் அறிமுகமான நடிகர் ரவிக்குமார், கேரள மாநிலம், திருச்சூரை பூர்வீகமாக கொண்டவர் ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். மலையாளத்தில் பல படங்களில் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழில் இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கிய ’அவர்கள்’ படத்தின் மூலம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழில் அறிமுகமானார்.
’பகலில் ஓர் இரவு’ படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் வரும் ”இளமை எனும் பூங்காற்று” பாடல் இவரைப் பேச வைத்தது. தொடர்ந்து தமிழில் மலபார் போலீஸ், ரிஷி, ரமணா, லேசா லேசா, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரிய திரை மட்டுமல்லாமல், ராதிகாவின் சித்தி, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகராக வலம் வந்தார் ரவிக்குமார்.
-எல்.குணாளன்.





