வாட்ஸ் ஆப் முதலிய சமூக உரையாடல் செயலிகள் இன்று நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவருகின்றன. அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே பார்த்துப் புரிந்துகொள்ளும் வகையில் (end to end encryption) அவை செயல்படுவதே இவற்றின் சிறப்பம்சம். இதில் பரிமாறப்படும் உரையாடல்கள் அனைத்தும் சங்கேதக் குறியீடுகளாக மாற்றப்படுகின்றன. இதனால் மூன்றாம் தரப்பினரால் அவற்றைப் பார்க்க முடியாது.
அதேவேளையில் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளில் அனுப்பப்படும் காணொளிகள், கோப்புகளின் அளவுக்கு ஒரு வரம்பு உண்டு. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திய டெலிகிராம் நிறுவனம், பெரிய கோப்புகளையும் பகிரவும் வசதிகளைக் கொடுத்துவருகிறது. எனவே எண்ணற்ற டெலிகிராம் குழுக்கள் உருவாகியுள்ளன. காணொளி அழைப்புகள், ஒலி அழைப்புகளையும் இதன்மூலம் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு டெலிகிராம் செயலி வளர்ந்துவரும் நிலையில் அதன் நிறுவனரும் தற்போதைய தலைமைச் செயல் அலுவலருமான பாவெல் துரோவ் பிரான்சின் போர்கேட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
போதைப்பொருள் பயன்பாடு, மோசடி போன்ற செயல்பாடுகள் தொடர்பான உரையாடல்கள், பரிமாற்றங்களுக்கு டெலிகிராம் இணையதளம் தணிக்கையின்றி அனுமதி கொடுத்துவிடுகிறது என்பதே அவர்மீதான குற்றச்சாட்டு என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
பிரான்ஸ் அரசின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்கா சார்ந்த பல்வேறு தகவல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் எட்வர்ட் ஸ்னோடென், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் முதலிய பலரும் இதனை ஒரு ‘மனித உரிமை மீறல்’ என்று சாடியுள்ளனர்.