சென்னை, நவ.13: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால், ஸ்பெயின் நாட்டின் வேளாண் பண்ணையில் ஊதியமின்றிப் பணிபுரிந்து வாழ்க்கை அனுபவத்தைச் சம்பாதிப்பதாக அவரது தாயார் சுசித்ரா மோகன்லால் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பிரணவின் பண்ணை பின்புலத்திலான புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகின்றன.

எதற்காக பண்ணை வீட்டில் பிரணவ் வேலை செய்யவேண்டும்? அவருக்கு வேளாண் தொழிலில் ஈடுபடும் திட்டம் ஏதுமிருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்பதுதான் விடையாக இருக்கிறது. பிறகு எதற்காக ஒரு பிரபலத்தின் மகன் ஒரு வெளி நாட்டில் பண்ணை வேலை செய்ய வேண்டும்? (இத்தனைக்கும் அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் நல்ல வசூலை செய்திருக்கின்றன. அவருக்குக் கதை சொல்ல தயாரிப்பாளர்களும் போட்டி போடுகின்றனர்) காரணம் இருக்கிறது.
“நான் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காகத்தான் இதனைத் தேர்ந்தெடுத்தேன்” என்று பிரணவ் சொன்னதாக அவரது தாயார் சொல்லியிருக்கிறார். புகழ் வெளிச்சம் ஒரு பெரும் போதை. அதனைத் தள்ளி வைத்துவிட்டு தனக்குப் பிடித்ததைச் செய்வது பிரபலங்களின் வாரிசுகளுக்கு லேசுப்பட்ட காரியமல்ல.

நீங்கள் எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ளலாம்…அதில் தவறில்லை… ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பாடம், ஒரு படிப்பினை, ஒரு அனுபவம் உண்டு. அவற்றைக் கற்றுக்கொள்வதும் வாழ்க்கையைப் படிப்பதுதான்.
பிரணவ் செய்வது ஒரு சுவையான விஷயம்தான். அவரும் ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான்!
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(புகைப்படங்கள்: அவரது இன்ஸ்டா பக்கத்திலிருந்து…)





