அன்பு நண்பர்களே,
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (டிச.3). ஐ.நா.சபையால் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நாளை உலகம் முழுக்க கடைபிடிக்கிறது. இன்றளவும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பொது இடங்களை அணுக முடியாமை, குடும்பத்திலும் சமூகத்திலும் புறக்கணிப்பு, சமூக ஊடகங்களிலும் திரைப்படங்கள், சின்னத்திரையில் கிண்டல் செய்யப்படுவது, வேலைவாய்ப்பின்மை, சொந்தத்தொழில் தொடங்குவதில் தடை என்று அவர்கள் சந்திக்கும் சவால்கள் எண்ணிலடங்காதவை.
ஐ.நா சபையின் பிரகடனம் (The United Nations Convention on the Rights of Persons with Disabilities-UNCRPD), மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா இடங்களிலும் சம வாய்ப்பு, பங்கேற்பதற்கான சூழல், பாதுகாப்பான பணிச்சூழல், சுய தொழில் செய்வதறகான வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதை வலியுறுத்துகிறது.
அந்த அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு சட்டமும் தற்போது மாற்றியமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம்-2016 புதிய அம்சங்களுடன் உருவெடுத்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் ஐ.நா. பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாம், அதன் ஷரத்துகளை இப்புதிய சட்டத்தில் உள்ளடக்கியிருக்கிறோம். அந்த அளவில் மகிழ்ச்சி.
ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கிறோமே…மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தகையை உரிமைகள் கிடைத்துவிட்டனவா? அவர்களைப்பற்றிய புரிதல் மாறியிருக்கிறதா? இல்லையே… இந்த சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன?
பரிதாபப் பார்வைக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். சலுகை தருவதற்கு பதிலாக அவர்களது உரிமைகளை அவர்களுக்குக் கொடுங்கள். வங்கியாளர்கள் தொழில் தொடங்கக் கடன் கொடுங்கள். மாற்றுத்திறன் சவாலற்ற மனிதர்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு துணிந்து திருமண உறவில் கை கொடுங்கள். எங்கெல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக அநீதிகள் நடக்கின்றனவோ, அதற்கு எதிராக உங்களால் முடிந்த எதையாவது செய்யுங்கள்.
குறைந்த பட்சம் ஒரு துரும்பையாவது எடுத்துப் போடுங்கள்!
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.