சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, கடந்த 9 ஆம் தேதிமுதல் எதிர்வரும் 22 ஆம் தேதிவரை கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காகப் பல்வேறு இலவசப்பயிற்சிகளை வழங்கிவருகிறது. 14 நாட்களில் 14 தலைப்புகளில் 60 ஆளுமைகள், 60 தலைப்புகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துவருகின்றனர். அவ்வகையில் பாட்காஸ்டிங் துறையில் உள்ள தொழில், வேலைவாய்ப்புகள் குறித்து இன்று (மே 18) ஆர்ஜே பிரியங்கா பயிற்சி வழங்கினார். அதிலிருந்து…
“பாட்காஸ்டிங் என்ற துறை கடல் போன்றது. உங்களுக்குப் பிடித்த விஷயத்தை எடுத்து ஒரு சானல் ஆரம்பித்து அதனைப்பேசத்தொடங்கலாம். இதில் தொடர்ச்சிதான் முக்கியம். தொடர்ந்து பாட்காஸ்டிங் எபிசோட்களைப் (பகுதிகளை) பதிவேற்றினால், கணிசமான நேயர்களைப் பெற முடியும். ஸ்பாட்டிஃபை ஃபார் கிரியேட்டர்ஸ் என்ற செயலி மூலம் செல்பேசியைப் பயன்படுத்தியே குரல் பதிவு செய்யலாம். வீடியோ பாட்காஸ்டிங்கும் இப்போது வந்துவிட்டது.
யூ டியூப் போல, பாட்காஸ்டிங் செய்வதால் நேரடியாகப் பணம் கிடைக்காது. மாறாக, இதன்மூலம் கிடைக்கும் புகழ், நேயர் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து இதர வழிகளில் வருவாய் ஈட்டலாம். நன்கொடைகள், ஸ்பான்ஸர்ஷிப், விளம்பரங்களைச் செய்து தருதல் ஆகியவற்றின்மூலம் வருவாய் பெற முடியும். மேலும், டப்பிங், விளம்பர வாய்ப்புகளும் கிடைக்கும்.
பாட்காஸ்டிங்கைப்பொறுத்தவரை குற்றச் செய்திகளை அலசுவது, கதை சொல்வது ஆகியவற்றுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. யூடியூபிலும் வீடியோ பாட்காஸ்ட் வந்துவிட்டது. நீங்கள் ஒரு பாட்காஸ்டர் ஆக ஆக வேண்டுமென்றால் வீட்டில் ஸ்டுடியோ அமைப்பு முறை வேண்டும் என்றில்லை. ஓசை அதிகம் இல்லாத அறையில் மின்விசிறியை அணைத்துவிட்டுப் பேசிக்கூட பதிவு செய்துகொள்ளலாம். அதேபோல, நேர்காணல்கள், உரையாடல்களையும் நிகழ்த்தலாம். பாட்காஸ்ட் பதிவுசெய்ய கொஞ்சூண்டு நேரம் போதும். ஆனால், அதற்கான தயாரிப்புக்கு (ஆய்வு) அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நம்பகத்தன்மை வரும்.
நீங்கள் முதன் முறையாக பாட்காஸ்ட் சானல் ஆரம்பித்துவிட்டால் உங்கள் உறவினர்கள், நண்பர்கள்மூலமாகவே அதனைப் பிரபலப்படுத்தலாம். பின்னர் படிப்படியாக உங்கள் நேயர் வட்டம் பெருகும். எல்லா வெற்றிக்கும் ஒரே அடிப்படை பின் தொடர்ச்சிதான்” என்றார் அவர்.
-கா.சு.துரையரசு.