நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு திருநாட்களில் மிக முக்கியமானது பொங்கல் திருநாள். தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல், மற்ற மாநிலங்களில் சங்கராந்தி, பைசாகி என்று பல்வேறு பெயர்களில் அறுவடைத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
வேளாண்மையின் அருமையைப் பறைசாற்றும் அந்நாளைக் கொண்டாடுவது நமது பண்டைய மரபு. அதனால்தான் பல்வேறு மாநிலங்களும் பொது விடுமுறையை அறிவிக்கின்றன. அன்றைக்கு எவ்விதமான தேர்வுகளையும் எந்த முகமையும் (agency) நடத்துவதில்லை.
ஆனால் விதிவிலக்காக, இந்திய பட்டயக் கணக்காயர் மன்றம், பட்டயக் கணக்காயர்களுக்கான (Chartered Accountants) தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பட்டயக் கணக்காயர் அமைப்பின் தலைவர் ரஞ்சித்குமார் அகர்வால் ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். வெங்கடேசன், இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டிருக்கிறார். அதில்,
“பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்…
எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. 1/2 *பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்* *தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச்சருக்கும், ICAI தலைவருக்கும் கடிதம்* சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.

தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “அறுவடைத் திருநாளான” பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற நாட்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. அதேபோன்ற மரியாதையும் கண்ணியத்தையும் பண்பாட்டுத் திருநாட்களுக்கும் சி.ஏ அமைப்பு வழங்கவேண்டும்.
நாடு முழுமைக்கும் பொதுவான அறுவடைத்திருவிழா, தமிழர்களின் பண்பாட்டுத்திருவிழா என்று போற்றப்படும் பொங்கல் நாட்களில் தேர்வுகளை நடத்துவதை சி.ஏ அமைப்பு கைவிடவேண்டும். பிறிதொரு நாட்களுக்கு அத்தேர்வுகளை மாற்றி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.