நூல் அறிமுகம்: “தி மணி ட்ரீ “
ஆசிரியர்: கிறிஸ் குயில்பியூ (Chris Guillebeau)
விலை : ரூ.1611/-.
வாங்க: https://www.amazon.in/Money-Tree-Finding-Fortune-Backyard/dp/0593188713
கையில் இருக்கும் வேலையைத் தவிர வேறு ஒரு கூடுதல் வருமானம் (passive income ) கிடைப்பது நல்ல விஷயம்தான் என்கிறது இந்நூல். சொந்தமாக வேலை செய்வது , அதுவும் மனதுக்கு பிடித்த ஒன்றைச் செய்வது, உயர்ந்த மனநிலையை தருகிறது என்று கூறுகிறார் நூலாசிரியர். இந்நூல், வாசகருக்குப் பல ஆலோசனைகளைக் கதை வடிவில் தருகிறது.
இந்நூலின் கதாநாயகன், ஜாக் ஆரோன்ஸ் , 28 வயது இளைஞன். படிப்பில் ஆர்வம் கொண்டவன். பல்கலைக்கழக மாணவன். பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறான். மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை அவனுக்குக் கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
அவன் பணிபுரியும் நிறுவன நிர்வாகம் அவனை வேலையைவிட்டு அனுப்ப முடிவு செய்கிறது. இந்நிலையில், வாடகை செலுத்த முடியாதாதால் அவன் தனது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறான்., இப்படி இருக்கையில் வாய்ப்புகளுக்கான தேடலும் அது கொடுக்கிற அயர்ச்சியும் அவனைத் தன்னம்பிக்கை இழக்க செய்கிறது .
இந்நிலையில் அவனது சக ஊழியர் கிளாரன்ஸின் அழைப்பின் பேரில் ஜாக் ஒரு வாராந்திர குழுக் கூட்டத்தில் தயக்கத்துடன் கலந்து கொள்கிறான்.
அங்குள்ள அனைவரும் ஒரு இலாபகரமான பகுதிநேரத் தொழிலைக் கண்டறியும் நோக்கத்துடன் ஒன்றுகூடியவர்கள். சுமார் 500 டாலர் வரை முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் என்கிறார்கள் கூட்ட ஏற்பாட்டாளர்கள்.
முதலீடு செய்ய ஜாக்கிடம் பணம் இல்லை. இருப்பினும், ஜாக் இந்த சவாலை தைரியமாக எப்படி மேற்கொள்கிறான் என்பதுதான் கதை. இங்கிருந்துதான் கதை சூடுபிடிக்கிறது.
முதலில் ஒரே வார இறுதியில் 1000 டாலர் சம்பாதிப்பது எப்படி என்பதை கதாபாத்திரமாக மாறிய வாசகரும் கற்றுக் கொள்கிறார். இறுதியில் பணத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் எப்படி கையாளுவது என்பதையும் இந்நூல் கற்றுக்கொடுக்கிறது. .
’தி மனி ட்ரீ’ புத்தகத்தில் இருந்து சில துளிகள் இங்கே…
# வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் உள்ளன. வாய்ப்புகளைத் தேடுவதற்கு நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி நினைக்கிறோம், ஆனால் உண்மை என்னவென்றால் அவை நம்மைச் சுற்றியே இருக்கின்றன.
#நாம் அனைவரும் நமது சொந்த செல்வத்தை உருவாக்க முடியும். பொருளாதாரத்தில் நீங்கள் வெற்றிபெற, நீங்கள் செல்வந்தராகப் பிறந்திருக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் படைப்பாற்றல், வள ஆதாரங்கள் மற்றும் கடின உழைப்பால் நமது சொந்த செல்வத்தை உருவாக்க முடியும்.
#எந்த செயலை செய்ய தொடங்குவதற்கும் வயது ஒருபோதும் ஒரு தடையல்ல . அதேபோல, நாம் வெற்றியடைய விரும்பினால், நாம் இடர்களையும் திருப்புமுனைகளையும் எதிர்கொள்ளவும் வேண்டும்.
#நாம் எப்போதும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
#பொறுமையாக இருங்கள். செல்வத்தை உருவாக்க நேரம் பிடிக்கும். ஒரே இரவில் அதிசயங்கள் நிகழாது என்பதால் சோர்வடைய வேண்டாம்.
#பிடிவாதமாக இருங்கள். உங்கள் கனவுகளை விட்டுவிடாதீர்கள்.
எப்படி, ஏன் ஒரு தொழிலைத் தொடங்குவது என்று உத்வேகம் தேடுகிறீர்களா?அப்படியானால் உங்களுக்கான நாவல் இதுதான்!
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.