சென்னை, நவ.10: தமிழின் மூத்த குணச்சித்திர நடிகரான திரு.டெல்லி கணேஷ் அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் சென்னையில் காலமான செய்தி திரைத்துறையினரை மட்டுமல்ல, திரை ரசிகர்களையும் சோகத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கதாநாயகன், துணை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள் என்று எல்லாவற்றிலும் தனது முத்திரையைப் பதித்தவர் டெல்லி கணேஷ். அவர் திரையில் தோன்றினாலே ‘நடிக்கிறார்’ என்ற எண்ணம் எவருக்கும் தோன்றாது. மாறாக, ‘வாழ்கிறார்’ என்றே தோன்றும். அப்படி ஒரு யதார்த்தமான நடிப்பு பாணியை அவர் பின்பற்றிவந்தார்.
’மைக்கேல் மதன காமராசன்’ போன்ற படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் சரி, ‘ஆறு’ போன்ற படங்களில் அப்பாவி பாத்திரம் கொடுத்தாலும் சரி, ’சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற படங்களில் பொறுப்பான தந்தை வேடம் கிடைத்தாலும் சரி, அந்த வேடத்துக்கான நியாயத்தை செய்துவிடுவார் டெல்லி கணேஷ் அவர்கள். ’தணியாத தாகம்’ முதலிய படங்களில் அவர் அலட்டல் இல்லாத நாயகனாகவும் பரிமளித்தார்.
மொத்தம் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள டெல்லி கணேஷ், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதுபெற்றவர். 1944ல் பிறந்த கணேஷ், விமானப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். பின்னர் இந்திய உணவுக்கழகத்தில் பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றும்போதே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. 1976 ஆம் ஆண்டில் கே.பாலச்சந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’தான் கணேஷின் முதல் படம் ஆகும்.
சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காத, தொழில்நேர்த்தி மிக்க கலைஞர்-என்ற சொல்லுக்கு இலக்கணமான சிலருள் டெல்லி கணேஷ் முக்கியமானவர்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(pic courtesy: Film Beat)