பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் எதிர்வினைத் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பிலிருந்தும் ஆளில்லா டிரோன்கள்மூலமும் இதர வழிகளிலும் தாக்குதல்கள் நடந்தன. இருமருங்கிலும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. ஆனால், இந்த ராணுவ எதிர்ப்பு நடவடிக்கைகளை இரு நாட்டுப் பொதுமக்களும் போர் என்று நினைக்கும் அளவுக்கு ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பிவிட்டன. நிறைய வதந்திகளும் பொய்ச்செய்திகளும் பரவத் தொடங்கின. ஒரு கட்டத்தில் இந்திய அரசே, ‘நாங்கள் அதிகாரப்பூர்வமாகச் சொல்லும் தகவலைத்தவிர வேறு எதையும் நம்பவேண்டாம்’ எனவும், ‘வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’ எனவும் சொல்லிவிட்டது. இருப்பினும் வீடியோ கேம் காட்சிகள், திரைப்படக் காட்சிகளை ‘போர்க்காட்சிகளாக’ப் பரப்பும் சமூக ஊடகர்கள் சிலரின் பொறுப்பற்ற தன்மை தொடரவே செய்தது.
ராணுவ எதிர்வினை நடவடிக்கைகள், போருக்கு இட்டுச்சென்றுவிடுமோ என்று இருநாட்டுப் பொதுமக்களும் அச்சத்தில் இருந்தனர். சர்வதேச சமூகம் இந்தியா-பாகிஸ்தான் போர்ச்சூழல் உருவாகவே கூடாது என்று தெளிவாகவே கூறிவிட்டது. மனித உரிமை ஆர்வலர்களும் மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர்களும் போர்களின் கொடும் விளைவைச் சொல்லி, போரைத்தவிர்க்குமாறு வேண்டிக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாலை (மே 10, 2025) 3.35 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான இயக்குநர் ஜெனரல், நம் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலைத்தொடர்புகொண்டு, மோதலை நிறுத்திக்கொள்ளலாம் என்று பேசியுள்ளார். இரு தரப்பும் ஒப்புக்கொண்டபடி அனைத்துவகையான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்துவிட்டதாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார். போர்ச்சூழல் முற்றுப்பெற்றுவிட்டது என்று அனைவரும் அமைதிகொண்டனர்.
அதேவேளையில் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான், தாக்குதலை தற்போது தொடங்கியிருப்பதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். காணொளியையும் வெளியிட்டிருக்கிறார். செய்திகளும் பல முனைகளிலிருந்தும் வெளியாகிவருகின்றன. எந்த வகையிலும் ஒப்பந்த மீறல் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இதை சர்வதேச சமூகமும் கண்காணிக்கவேண்டும்.
இந்தியா போன்றவொரு நாட்டைச் சீண்டுவதும் சர்வதேச ஒப்பந்த நடைமுறைகளை மீறுவதும் எவ்வளவு பெரிய பிழை என்பதை பாகிஸ்தான் உணர்ந்தே தீரும். சமீபத்திய நடவடிக்கைகள் அதைத்தான் சொல்கின்றன.