ரூ.195 கோடி நிதி திரட்டிய வாவ் மோமோ!

ரூ.195 கோடி நிதி திரட்டிய வாவ்  மோமோ!

சென்னை, மே 21, 2025: கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சங்கிலித்தொடர் உணவு நிறுவனம் ‘வாவ் மோமோ’ ஆகும். இந்நிறுவனம், ரூ.195 கோடி அளவுக்கு விரிவாக்கத் திட்டத்துக்கான நிதியைத் திரட்டியிருக்கிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த புகழ்பெற்ற துணிகர முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல், மலேஷியாவைச் சேர்ந்த கஸானா நேஷனல் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து  22.8 மில்லியன் (ரூ.195 கோடி) தொகையை வாவ் மோமோ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன. இத்தொகை, கடனாக வழங்கப்படுகிறது. இந்நிதியைப்பயன்படுத்தி, வாவ் மோமோஸ் நிறுவனம், தனது விரிவாக்கத் திட்டத்துக்குப் பயன்படுத்தும்.

வாவ் மோமோவின் கதை, அந்நிறுவனத்தின் பர்கர் மோமோஸைப்போலவே சுவையானது. மொறுமொறுப்பானது. கடந்த 2008ல்தான் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட வாவ்! மோமோ நிறுவனம், கல்லூரி தோழர்களான சாகர் தரி மற்றும் பினோத ஹோமகா ஆகியோரால் ஆகஸ்ட் 29, 2008 அன்று தொடங்கப்பட்டது. அவர்கள் இருவரும் கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். அனைவரும் விரும்பும் மோமோஸ்-ஐ ஒரு மாறுபட்ட சிற்றுண்டியாக, உணவாக மாற்றி வழங்குவதே அவர்களின் நோக்கம். அதாவது அவர்களின் உணவை ருசிப்பவர்கள் ‘வாவ்…இதுவல்லவோ மோமோஸ்’ என்று துள்ளிக்குதிக்க வேண்டுமாம்.

உடனே பிறந்தது வணிகப்பெயர். நிறுவனத்துக்கு ’வாவ்! மோமோ’ என்று பெயர் சூட்டினர். முதன்முதலில் அவர்கள் எடுத்த முடிவு, தனியாகக் கடை பிடிப்பதில்லை என்பதுதான். பெரிய சில்லரை விற்பனைக் கடைகளுக்குள் கொஞ்சூண்டு இடத்தை வாடகைக்குப் பிடித்து ‘கடைக்குள் கடை’ மாதிரியைப் பின்பற்றித் தொழிலைத் தொடங்கினர். தற்போது 17 நகரங்களில் 300 கிளைகளுடன் வெற்றி நடை போடுகிறது வாவ் மோமோ! ’வாவ் சைனா’  ‘வாவ் சிக்கன்’ என்ற பெயர்களிலும் இந்நிறுவனம் கிளைகளை நடத்தி வருகிறது.

இவ்வெற்றியில் துணிகர முதலீட்டு நிறுவனங்களுக்கும் பங்குண்டு. 2017 ஆம் ஆண்டில் லைட் ஹவுஸ் மற்றும் இந்தியன் ஏஞ்செல் நெட்வொர்க் அமைப்புகள் இணைந்து ரூ.44 கோடியை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தன. அடுத்தடுத்து ஃபேப் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர், டைகர் குளோபல், கஸானா நேஷனல் முதலிய பலரும் வாவ் மோமோவில் முதலீடு செய்யவே, நிறுவனத்தின் மதிப்பு  கிடுகிடுவென உயர்ந்தது. ஆண்டுக்கு ரூ.479 கோடி வர்த்தகம் செய்யும் நிலையில் அந்நிறுவனம் ரூ.2400 கோடி மதிப்புள்ளதாக உயர்ந்திருக்கிறது. 2024-25 இல் இந்நிறுவனம் ரூ.650 கோடி வருவாய் ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சிறிய யோசனை, எவ்வாறு பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்கிறது என்பதற்கு வாவ் மோமோ ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.

-கா.சு.துரையரசு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *