கோவை மாவட்ட சிறுதொழில் சங்க கூட்டமைப்பான கொடிசியா, தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறு-குறு-நடுத்தரத்தொழில்களின் நலனுக்காகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.
அதில் மிக முக்கியமாக, தமிழகத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதற்கான நிதியில் 90% ஐ மாநில அரசே ஒதுக்க வேண்டும் என்றும், அத்தொகையைப் பயன்படுத்தி பள்ளி இடைநின்ற இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டுப்பயிற்சியை இலவச உணவு, இலவச தங்குமிட வசதியுடன் வழங்கவேண்டும் என்று கொடிசியா கோரியிருக்கிறது.
இதர கோரிக்கைகளாவன:
*சிறு,குறு, நடுத்தரத்தொழில்களுக்கு 25% மூலதன மானியம், குறுந்தொழில்களுக்கு 4% மும், இதர தொழில்களுக்கு 2% மும் வட்டி மானியமான வழங்கப்பட வேண்டும்.
*கோவைக்கான பெருந்திட்ட வரைவு -2041 (Master plan) வந்திருக்கிறது. அதில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படவேண்டும். தவறுகள் களையப்படவேண்டும்.
*கட்டட அனுமதிக்காகத் தொழில்முனைவோர் பல்வேறு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. இதனைத்தவிர்க்க ஒற்றைச்சாளர முறை ஒன்றை அறிமுகப்படுத்தவேண்டும்.
*தொழில் சார் கட்டட அனுமதியைப்பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனைத் தவிர்க்க, 45 நாட்களுக்குள் அனுமதி வழங்கிடவேண்டும். கோவை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
*கிழக்கு வட்டச்சாலை, மேற்கு வட்டச்சாலை ஆகியவற்றை அமைப்பதுடன் எல் அண்ட் டி புறவழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படவேண்டும்.
*கோவையில் 25 கி.மீ சுற்றளவில் குறைந்தது 3 தொழிற்பூங்காக்கள் தலா 1000 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவேண்டும்.
*பல்வேறு சாலைகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கியிருப்பதாக கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.