சென்னை, மே. 21, 2025: நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே போனாலும் தங்கத்துக்கு மவுசு கூடிக்கொண்டு தான் இருக்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்துவதில்லை, தங்களது அவசர தேவைக்கு உதவும் பொருளாகவும் பார்க்கிறார்கள்.
உடனடி பணத்தேவைக்கு ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து தான் பணத்தை பெற்று கொள்கின்றனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து அவரசத்துக்கு பணம் பெறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு சாதாரண மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் காலத்தில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைக்கலாம். ஆனால் இப்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இந்த முறையை முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள 9 அம்சங்கள்:
* தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். அதற்கு நகை வாங்கிய ரசீதையோ அல்லது எழுத்துப்பூர்வ உறுதி மொழியை சமர்ப்பிக்க வேண்டும்.
* தங்கத்தின் மதிப்பில் 75% மட்டுமே கடன் வழங்க வேண்டும். இதுவரை 90% வழங்கப்பட்டு வந்தது.
* வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும். அடமானம் வைக்கும் 22 காரட்டின் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும், அது குறைவாக இருக்கும் பட்சத்தில், அதனை 22 காரட் மதிப்பீடாக மாற்றி கணக்கிட்டு கடன் வழங்க வேண்டும்.
*தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும். தங்க நகை போல், வெள்ளிப் பொருட்களுக்கும் அடமானக்கடன் கடன் வழங்கலாம்.
* ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிடப்பட வேண்டும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு. ஏல நடைமுறை போன்றவற்றை குறிப்பிட வேண்டும். கடன் வாங்குவோர் கடன் செலுத்த தவறினால் ஏலம் எடுக்கப்படும் நடைமுறைகள், ஏலம் விடுவதற்கு முன் நகையை மீட்டெடுக்க வழங்கப்படும் காலளவு, கடனைவிட கூடுதல் தொகை ஏலத்தில் கிடைத்தால் அதிலிருந்து வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் தொகை போன்றவை குறிப்பிட்ட ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
*கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 நாட்களுக்குள் தங்கத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். தாமதமானால், அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5000 வங்கி அல்லது நிதி நிறுவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி விடுத்துள்ள வரைவு வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் உடனடியாகக் கடன்பெற நகைக்கடன்கள் மட்டுமே ஒரே எளிய வழியாக இருந்துவந்தது. ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. அதேபோல, துணிகர முதலீடு, ஏஞ்செல் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடு கிடைக்காத தொழில்முனைவோர், நகைக்கடன்களையே நாடுவர். இனி அதற்கும் தடங்கல் வந்துவிட்டது.
ரிசர்வ் வங்கியின் இப்புதிய விதிமுறைகளால், மக்கள் தனியார் அடகுக்கடைகள், தனிநபர்களிடம் போய் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று நிதி ஆலோசகர்களும் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். எனவே, உடனடியாக இந்த விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.