சென்னை, மே 13: கடந்த 2019 ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு காதல் வலைவீசி, அவர்களை ஏமாற்றி, பாலியல் துன்புறுத்தல் செய்து, அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டி, பணம் பறித்து, கூட்டு பலாத்காரம் செய்து மனித உரிமைகளை அதிகபட்சமாக மீறியது ஒரு மிருகக்கும்பல். அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தியபிறகே வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இறுதியில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பவர்கள் குற்றவாளிகளே என்று கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துவிட்டது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கைத் தொய்வில்லாமல் நடத்திய சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன், பாராட்டுக்குரியவர். அப்பெண்களுக்கு தைரியமூட்டி, அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு ஆகும்.
இவ்வழக்கு புகாராக வந்தபோதே உடனே களமிறங்கிய இந்திய ஜனநாயக மாதர் சங்கம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி, நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகள் ஆகியோரை ‘முனைவு’ மனதாரப் பாராட்டுகிறது. மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை தமிழக சட்டமன்றம் நிகழ்த்தி, சட்ட விதிகளை மென்மேலும் கடுமையாக்க வேண்டும் என்று முனைவு கேட்டுக்கொள்கிறது.
(படம்: நன்றி: freepik)