அன்பு தொழில் முனைவோரே,
இன்று (நவ.26), இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள். 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ல்தான் அரசியல் சாசன வரைவுக்குழு வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவை அன்றைய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது.
சட்டமேதையும் சமூக, பொருளாதார சீர்திருத்த அறிஞருமான முனவர்.பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழுவில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் , என்.கோபாலசாமி அய்யங்கார், ,கே.எம்.முன்ஷி,சையது முகமது சாதுல்லா, என்.மாதவராவ் (முனைவு, சாதியப் பின்னொட்டுகளை ஊக்குவிப்பதில்லை என்றாலும் வரலாற்றில் இடம்பெற்ற இப்பெருமக்களின் பெயர்களிலிருந்து பின்னொட்டுகளை நீக்கினால் அடையாளக் குழப்பம் ஏற்படும் என்பதால் அப்படியே குறிப்பிடுகிறோம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். (பி.எல்.மிட்டர்,ன் டி.பி கைத்தான் ஆகியோருக்குப் பிந்தைய எண்ணிக்கை இது).
உலக நாடுகளில் உள்ள அனைத்து அரசியலமைப்புச் சட்டங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் எவை நமக்குப் பொருந்துமோ, எவை நமது விழுமியங்களுக்கு ஒப்புமோ…அவற்றை எடுத்துக்கொண்டது. இந்திய சூழலைக் கருத்தில்கொண்டு தொழிலாளர் உரிமை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமை,மகளிர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் உரிமை, நாட்டின் இறையாண்மை, கூட்டாட்சி தத்துவத்தின் தேவை, அடிப்படை உரிமைகள், கடமைகள் என்று எல்லாவற்றையும் குறித்த புரிதலோடும் அக்கறையோடும் அந்த வரைவுக்குழு சட்ட வரைவை எழுதியது. பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு அதனை அன்றைய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. அடுத்த ஆண்டில், அதாவது, 1950ல் அது முழுமையாக சட்டமாகி, நாம் ஒரு ‘குடியரசு’ நாடாக ஆனோம்.
இந்திய அரசியல் சாசனத்தின் சிறப்பம்சமே மதச்சார்பின்மையும் சகிப்புத்தன்மையும் மனித உரிமைகளும்தான். எனவேதான் இதனை வடித்தெடுக்கும் குழுவின் தலைவராக அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்தார் ஆசிய ஜோதி என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள்.

சுமார் இரு நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த, பல நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாகக் கிடந்த பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு பரந்த நாடாக உருவாக்குவதும் ஒவ்வொரு பிராந்திய மக்களின் பிரதிநிதித்துவமும் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படுவதும் எளிதான செயலன்று. அதனைச்செய்யும் ஆற்றல் படைத்தவராக அம்பேத்கர் இருந்தார் என்பதே வரலாற்று ஆச்சரியம். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக நேரு அவர்களும் செயல்பட்டு, ஒரு தேசத்தைக் கட்டியெழுபினர்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையான மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, நாட்டின் எப்பகுதிக்கும் சென்று பணியாற்றவும் தொழில் செய்யவும் உரிமை ஆகியவை இன்றைய சூழலில் அடிக்கோடிட வேண்டிய அம்சங்கள் ஆகும். மதம், சாதி, இனம், பிரதேசத்தின் பெயரால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் சூழலை இன்று நாம் பார்க்கிறோம். இதனால் சமூக அமைதி கெடுகிறது. தொழில் முனைவோரான நாம் இதனை வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்துவிட முடியாது. சமூக அமைதியும் (social peace) தொழில் அமைதியும் (industrial peace) ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டவை. அது மட்டுமின்றி, தொழில் முனைவோருக்கும் தொழில் துறைக்கும் ஒரு சமூகப் பொறுப்பு உண்டு. எவ்விதக் காரணத்தையும் சொல்லி நாம் அதனைப் புறம் தள்ளிவிடமுடியாது. அன்பும் அமைதியும் இல்லாத சமூகத்தில் நாம் எந்தப்பொருளை/சேவையை விற்று தொழில் செய்யப்போகிறோம்? அப்படிச் செய்தால்தான் என்ன பயன்?
பொறுப்புள்ள குடிமகனாக/குடிமகளாக, தொழில் முனைவோராக நமது அரசியல் சாசன சிற்பிகளை இன்று நன்றியோடு நினைவு கூர்வோம்.
வந்தே மாதரம்!
(lead pix courtesy: Sumitra Narayan, EdictGov-India, via Wikimedia Commons)