கடந்த சனிக்கிழமை (அக்.5) மதுரையில் நடைபெற்ற டிஜிட் ஆல் நிகழ்ச்சியில் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் தொழில்முனைவோருக்குத் தேவையான பயனுள்ள ஆலோசனைகளை அள்ளி வழங்கினர்.
அந்த வகையில் சிறுதொழில் நிறுவனங்களுக்கான வியூகம், முன்னேற்றத்திட்டமிடல் ஆகிய அம்சங்களில் கைகொடுத்துவரும் தேடிக்கோ-நிறுவனத்தின் நிறுவனரும் தொழில் ஆலோசகருமான திரு.மணிமாறன் அவர்கள் பேசியதிலிருந்து…
“இன்றைக்கு டிஜிட்டல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் அம்சம் குறித்து நமது தொழில் முனைவோர் புரிதலை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு நகர்வது (transformation) என்பது முக்கியமானது. உலகப் பணக்காரர்களுள் முக்கியமானவரான ராக்ஃபெல்லர்முதல் பில்கேட்ஸ்வரை எல்லோரும் இதனைப் புரிந்துகொண்டவர்கள்தாம். இப்போது டிஜிட்டல் துறையிலும் இந்த ‘அடுத்த கட்டத்துக்கு நகர்வது’ விரைவாக நடக்கிறது. நன்றாக நினைவில் கொள்ளுங்கள். இனிமேல் எந்த ஒரு நிறுவனமும் தொழில்நுட்பத்தைப் புறம் தள்ளிவிட்டு வளர முடியாது.
அதனைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள்தாம் எளிதாக அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றன. ஓலா கேப்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். அது, வாடகைக் கார் சேவையை ஒருங்கிணைக்கும் நிறுவனம்.

இதன்மூலம் அந்நிறுவனத்துக்கு பெரிய அளவில் வாடிக்கையாளர் தரவுகள் கிடைத்திருக்கின்றன. இப்போது அந்நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களின் போக்குவரத்துத்தேவைகள் நன்கு புரிந்திருக்கும். எனவேதான் இப்போது அந்நிறுவனம் வாகன உற்பத்தியில் இறங்குகிறது.
எல்லோரும் டிஜிட்டல் என்று பேசுகிறோம். உண்மையில் டிஜிட்டல் என்பது வணிக மாதிரி கிடையாது. அது உங்கள் பணியை எளிமையாக்க உதவும் நண்பன்தான். எனவேதான் சொல்கிறேன். உங்களது நிறுவனத்தின் மொத்தக் குழுவுக்கும் இணையம் தொடர்பான பயிற்சி கொடுங்கள்.
உங்கள் நிறுவனம் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு நல்ல பரிச்சயம் இருந்தால் அது, சிறந்த ஊழியர்களை ஈர்க்க உங்களுக்கு உதவும் என்பதை மறவாதீர்கள்” என்றார்.
-அருண்மொழி.