சென்னை, மே 17, 2025: “என்னதான் செயற்கை நுண்ணறிவுத்தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனித உணர்வுகள், சிந்தனைத்திறன் ஆகியவற்றுக்கு மாற்றாக அது ஆக முடியாது என்று புகழ்பெற்ற இணையப்பாதுகாப்பு வல்லுநர் ‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட நூலக இயக்ககம் 14 நாட்களாக மாணவர்களுக்கான பல்துறைப்பயிற்சிகளை வழங்கும் திட்டத்துடன் சென்ன்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற இணையப்பாதுகாப்பு வல்லுநர் ‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம் செயற்கை நுண்ணறிவுத்தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வகுப்பை வழங்கினார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் பேசியதாவது:
“செயற்கை நுண்ணறிவுத்தொழில்நுட்பம் மனிதனைப்போல வேலை செய்தாலும் மனித மூளைக்கு மாற்றாக ஆக முடியாது. அதேபோல, மனித உணர்வுகளைத் தொழில்நுட்பங்களால் நகலெடுக்கவும் முடியாது. எடுத்துகாட்டாக, பாலுறவு சார்ந்த ரோபோட் பொம்மைகள் மனிதர்களை மாற்றாக ஆகிவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதனைப்புரிந்துகொள்ள வேண்டுமென்றால் செயற்கை நுண்ணறிவுத்தொழில்நுட்பம் செயல்படும் விதம் குறித்து நாம் அறிந்துகொள்ளவேண்டும். அது, உங்களுக்குப் பிடித்த விதத்தில் தன்னை வடிவமைத்துக்கொள்கிறது.
பாலுறவு சார்ந்த ரோபோட் பொம்மைகளை நீங்கள் செயற்கை நுண்ணறிவுமூலம் இயக்கினால், அது உங்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே பேசும். ஆனால் நிஜமான மனிதர்கள் அப்படி இருக்க மாட்டார்களே…மனிதனின் விருப்பு வெறுப்புகள், மனநிலை மாறிக்கொண்டேதானே இருக்கும்…மனித மனம் ஒரே மாதிரியான விஷயங்கள் தொடரும்போதும் சலிப்பு தட்டச் செய்து, உங்களை திசை திருப்பும். அதேதான் இந்த விஷயத்திலும் நடக்கும். ஒருபோதும் மனிதனுக்கு மாற்றாக இயந்திரங்கள் செயல்பட முடியாது. அதேவேளையில் செயற்கை நுண்ணறிவுத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் அவர்.
-கா.சு.துரையரசு.