சென்னை, டிச.16: அரசுமுறைப்பயணமாக இலங்கை அதிபர் திரு.அநுர குமார திசநாயக்க, தில்லி வந்துள்ளார். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரைச்சந்தித்து ஆலோசனைகளை நடத்தினார். அடுத்தகட்டமாக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தான் பதவியேற்றபிறகு மேற்கொண்டுள்ள முதல் இந்திய சந்திப்பு இது என்று பெருமையுடன் கூறிய அநுர, தொடர்ந்துவரும் இந்திய மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இலங்கை சிறைகளில் விசாரணைக் கைதிகளாக வாடும் தமிழக மீனவர்களை விடுவிப்பது, அவர்கள்மீது கடுமையான அபராதங்களை விதிப்பது, கடற்படையால் மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகள் ஆகியவற்றை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
கோவிட் காலகட்டம் மட்டுமின்றி, பொதுவாக எல்லாவிதமான பேரிடர் காலங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. அந்நாட்டின் உள் கட்டுமான வளர்ச்சிக்கு நமது நாடு பெரிதும் நிதி உதவிகளைச் செய்துள்ளது. தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் கணிசமாக வாழும் நாடு இலங்கை. அதேபோல நமது ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தில் தவிர்க்க முடியாத கூட்டாளியாகவும் இலங்கை திகழ்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நீண்டகால அடிப்படையில் இந்தியா-இலங்கை நட்புறவு தழைக்க அநுரா, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இலங்கையின் முதல் இடதுசாரி அதிபரான அவர்மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை உணர்ந்து நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.
(முகப்புப்படம்: நன்றி: அநுர அவர்களின் எக்ஸ் பக்கம். இதர படங்கள்: இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக சமூக ஊடகங்கள்)