பதிப்பாளராவது எப்படி? -கவிஞர் மனுஷ்யபுத்திரன் உரை

பதிப்பாளராவது எப்படி? -கவிஞர் மனுஷ்யபுத்திரன் உரை

சென்னை, மே 16: சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, கடந்த 9 ஆம் தேதிமுதல் எதிர்வரும் 22 ஆம் தேதிவரை  கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காகப் பல்வேறு இலவசப்பயிற்சிகளை வழங்கிவருகிறது. 14 நாட்களில் 14 தலைப்புகளில் 60 ஆளுமைகள், 60 தலைப்புகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துவருகின்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு மட்டுமே என்று இருந்த இப்பயிற்சிகளில் பொதுமக்களுக்கும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.

அவ்வகையில் 15 ஆம் தேதி சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் தலைவரும் உயிர்மை பதிப்பகத்தின் தலைவருமான திரு.மனுஷ்யபுத்திரன், ‘பதிப்பகம் தொடங்குவது எப்படி?’ என்ற தலைப்பில் பயிற்சி உரையை வழங்கினார். அதிலிருந்து…

“நான் படித்த காலங்களில் எதுவுமே எங்களுக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றாகத் தேடித்தேடித்தான் படிக்க வேண்டும் என்ற நிலை. இந்நிலையில் நான் 1993 முதல் 2000 ஆம் ஆண்டுவரை நாகர்கோவிலில் காலச்சுவடு இதழில் பணியாற்றினேன். முதலில் நாகர்கோவில். பின்னர் சென்னை.  இந்ந்நிலையில் ஒரு சூழலில் அப்பணியிலிருந்து வெளியே வந்துவிட்டேன். சொந்தமாகப் பதிப்பகம் தொடங்கவேண்டும் என்று விருப்பம்.

அப்போது எனக்குப் பரிச்சயமான எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அவரிடம் பதிப்பகம் தொடங்கும் ஆசையைச் சொன்னேன். 6 நூல்களை எனக்கு எழுதிக்கொடுத்தார். அவற்றை வெளியிட வெளியீட்டு விழா வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு நடிகர் கமல்ஹாசன் அவர்களை விருந்தினராக அழைக்கவேண்டும் என்று விரும்பினேன். உடனே சுஜாதா அவர்கள், கமல் அவர்களைத் தொலைபேசியில் அழைத்ததோடு மட்டுமல்லாமல் மணிரத்னம் அவர்களையும் சேர்த்தே விழாவுக்கு வரச்செய்தார். பேரா.கு.ஞானசம்பந்தன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் என்று பிரபலங்களின் பட்டாளமே வந்து குவிந்தது. குமுதம் இதழில் 12 பக்க கட்டுரை, முன்னணி தொலைக்காட்சி சானலில் 1.5 மணி நேர செய்தி என்று தொடர்ச்சியாக எங்களது நிகழ்ச்சி புகழ்பெற்றதாக ஆகிவிட்டது.

மனுஷ்யபுத்திரன்.

இவ்விழாவுக்கு முன்பாக, ஒரு பிரபல புத்தகக்கடைக்குச் சென்று ‘புத்தகங்களை விற்றுத்தர முடியுமா?’ என்று கேட்டிருந்தோம். அவர்கள் தமிழ்ப்புத்தகத்தை விற்பனை செய்வதில்லை என்று சொல்லிவிட்டனர். எங்களது நிகழ்ச்சி நடந்து முடிவடைந்தபிறகு அதே நிறுவனம், எங்களிடம் நூற்றுக்கணக்கில் ஒரு எண்ணிக்கையைச் சொல்லி, அந்த அளவுக்கு புத்தகங்கள் வேண்டும் என்று சொன்னது. நானோ, ‘ஆங்கிலப்புத்தகக் கடைகளுக்கு நாங்கள் புத்தகம் தருவதில்லை’ என்று சொல்லிவிட்டேன்.

நீங்கள் ஒரு பதிப்பாளராக ஆக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நல்ல எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து, அவர்களுடன் தகவல் தொடர்பில் இருக்கவேண்டும். அதேபோல, நூலைப்பிரபலப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். புத்தகக் கண்காட்சிகளில் அரங்குகளை அமைக்கலாம். நூல் விற்பனைக்கு அதன் தலைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் ஒரு கவிதை நூலை எழுதினேன். அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று தொடர்ச்சியாக முகநூலில் எழுதிவந்தேன். ஒரே சஸ்பென்ஸ்தான். ஒவ்வொரு முகநூல் நண்பரும் ஆளுக்கொரு தலைப்பைச் சொல்வார்கள். எவ்வளவு கவிதைகள் அதில் இருக்கும்?; விலை எவ்வளவு இருக்கும்?-என்பன போன்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டே வந்தேன். ‘நமக்குப் பிரியமானவரைப்பற்றிய சொல்லைத்தான் தலைப்பாக வைக்கவிருக்கிறேன்’ என்று சொன்னது ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டே இருந்தது.

அந்த நாளும் வந்தது. கிறித்துமஸுக்கு முதல் நாள் 9 மணிக்கு நூலில் தலைப்பை வெளியிட்டேன். ‘மிஸ் யூ…இவ்வளவுதான் சொல்ல முடிந்தது’ -இதுதான் தலைப்பு. இடைப்பட்ட காலத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த சஸ்பென்ஸ், நூலுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. ‘உங்களை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ என்ற தலைப்பில் ஒரு நூல். அதுவும் வரவேற்பு பெற்றது.

இதுவரை கேட்டிராத பெயர்களும் நல்ல படைப்புகளால் புகழடைவது உண்டு. அண்மையில் வெளியான ‘கழிவறை இருக்கை’ வரும்வரை அதன் ஆசிரியர் லதாவை எவருக்குமே தெரியாது. நடிகர் அரவிந்த சாமி, ஒரு நேர்காணலில் ‘பணம்சார் உளவியல்’ (psychology of money) நூலைப் பரிந்துரைக்காவிட்டால் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்காது. நீங்கள் ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்றால் அது சார்ந்த இடத்தில் உங்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும்.

புதியவர்களுடன் பழகும் தன்மை நமக்கு வேண்டும். இல்லாவிட்டால் பழகிய ஆட்களுடன் மட்டுமே பேசிக்கொண்டு பொழுதைக் கழித்துக்கொண்டிருபோம். நமக்கு நாமே பணயக்கைதி ஆகக்கூடாது.  தகவல் தொடர்புதான் வாய்ப்புகளை நமக்குக் கொண்டுவந்து தரும்” -இவ்வாறு அவர் பேசினார்.

-கா.சு.துரையரசு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *