சென்னை, ஏப்ரல் 28: கோடை வெயில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் இதே நிலைதான். மக்களும் தங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்க இளநீர், குளிர் பானங்கள், மோர், குளிர்ச்சியான நீர், வெள்ளரிப்பிஞ்சு, பழச்சாறுகள் என்று எல்லா வழிகளையும் நாடுகின்றனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களைத் திறந்துவருகின்றன. இவற்றால் ஓரளவுக்கு பயன் கிடைக்கிறது. காரணம், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் இந்த சேவையைச் செய்ய முடியாது என்பதுதான்.
இதனை யோசித்த கொங்கு மண்டலத்துக்காரர்கள் ஒரு முடிவெடுத்திருக்கின்றனர். சிறு நிறுவனங்கள்முதல் பெரிய தொழில் குழுமங்கள்வரை பலரும் தத்தம் நிறுவனங்களுக்கு வெளியே நீர் மோர் பந்தல்களைத் திறந்து வைத்திருக்கின்றனர். கால்நடையாகச் செல்வோர், இரு சக்கர வாகனப்பயணிகள், உணவு டெலிவரி தொழில் செய்யும் பணியாளர்கள், ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி தொழிலாளர்கள் என்று பலரும் இங்கு நின்று, நீர் மோரை ருசித்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. நீர் மோர் என்றுதான் பெயரே தவிர நீர் குறைவாகவும் மோர் அதிகமாகவும் இருக்கும் தரமான ‘மோர்’ அது. பருகியவர்கள் வாழ்த்திச் செல்கின்றனர். ஒரு நிறுவனம் செய்வதைப்பார்த்து, மற்ற நிறுவனங்களும் இதனைப் பின்பற்றத் தொடங்கியிருப்பதால் ஒரு இயக்கமாகவே இது மாறியிருக்கிறது.
கோவையைப்போலவே சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலத்துக்கார தொழில் நிறுவனங்களும் இதனைப் பின்பற்றலாமே… நீங்கள் பார்த்த தனியார் நிறுவன நீர் மோர் நிலையங்கள் இருந்தால், அவை குறித்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.
-கா.சு.துரையரசு.
(முகப்புப் படத்தில்: கோவை காளப்பட்டி அருக்கே உள்ள ஸ்ரீ அக்ஷயம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ள நீர் மோர் நிலையம்).