சிறு-குறு-நடுத்தரத்தொழில்களுக்கு இணைய உலகின் பயன்களைக் கொண்டுசேர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது டிஜிட் ஆல் அமைப்பு. தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் அங்கமான இது, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் செயல்பட்டுவருகிறது.
இவ்வமைப்பின் சார்பில் மதுரையில் நேற்று (அக்.5) டிஜிட் ஆல் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர் சிவசங்கரன், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பின் இலக்கு இயக்குநர் சிவராஜா ராமநாதன், தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் இலக்கு இயக்குநர் ஐயன் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும், தொழில் முனைவோரும் டிஜிட்டல் படைப்பாளிகளும் கலந்துகொண்டனர்.
அதில் கலந்துகொண்ட பலரும் இணையத்தொழில்நுட்பம் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்ற கருத்தை மொழிந்தனர். அதேவேளையில் ஐயன் கார்த்திகேயன், வேறு ஒரு கோணத்தில் ஒரு முக்கியமான விஷயத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சினார்.

அவர் பேசும்போது, “இன்றைக்கு எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டுவருகிறது. இணையம் சார்ந்த குற்றங்கள் அதிகரிக்கின்றன. கொஞ்சம் ஏமாந்தால் உழைத்த பணம் அனைத்தும் இணைய மோசடியால் இழக்க வாய்ப்புண்டு. பொய்ச்செய்திகள், வெறுப்புப் பிரச்சாரம் ஆகியவை சமூகத்தை மட்டும் பாதிக்கும் என்று நினைக்கக்கூடாது. அது தொழில் துறையையும் கடுமையாகப் பாதிப்பதை நாம் பார்க்கிறோம். எனவே, அதுகுறித்த தெளிவு நமக்குத்தேவை.
தொழில் நுட்பம் என்பது உங்களுக்கு உதவி புரியும் கருவிதானே ஒழிய, அதுவே உங்கள் தொழில் என்று நினைத்துவிடக்கூடாது. நீங்கள் தொழில் செய்வதில் கவனம் செலுத்தவேண்டும். நானே சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்கிறேன் என்று இறங்கிவிடக்கூடாது. நீங்கள் உங்கள் தயாரிப்பு பற்றி நடனமாடி (!) பிரபலப்படுத்தமுடியுமா? அது சாத்தியமும் இல்லை. அவசியமும் இல்லை. சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தருவது அடிப்படையானது. அதில் கவனம் செலுத்துங்கள்” என்றார்.
அவரையடுத்து உரையாற்றிய சிவராஜா, “ஐயன் கார்த்திகேயனின் கருத்தில் நான் முழுக்க உடன்படுகிறேன். தொழிலின் அடிப்படையில் நாம் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, மற்றவற்றில் கவனம் செலுத்தக்கூடாது. உங்கள் துறையில் நீங்கள் முதன்மை இடத்தை அடையப் போராட வேண்டும். அல்லது அதில் ஒரு துணைப்பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னிலை வகிக்க முயற்சி செய்யவேண்டும்” என்றார்.
-அருண்மொழி.