தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரிய அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது நடிகர் விஜய் அவர்களின் ‘தமிழக வெற்றிக்கழகத்தின்’ முதல் மாநில மாநாடு. ஊடகங்கள் தொடர் செய்திகளால் மென்மேலும் பரபரப்பானது தமிழக அரசியல் களம். பெரிய அளவிலான மாநாடு என்பதாலும் ரசிகர்களால் நிரம்ப வாய்ப்பு இருந்தமையாலும் பல்வேறு இடங்களைப் பரிசீலித்து இறுதியாக விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது என்று முடிவானது. எல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டு வந்திருந்தது. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துகொண்டதாக ஊடகங்களில் ஒரு புள்ளிவிபரம் வெளியாகியிருக்கிறது.
இதில் சிறப்புரையாற்றிய விஜய், பிரிவினைவாதம் மற்றும் ஊழல் ஆகியவற்றைத் தனது கட்சியின் முக்கிய எதிரிகளாகக் குறிப்பிட்டுப் பேசினார். திராவிட மாடல் ஆட்சியை விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. அதேவேளையில் முன்னணி எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்காததை அரசியல் நோக்கர்கள் அடிக்கோடிடுகின்றனர். 2026 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பதை தாங்கள் லட்சியமாகக் கொண்டிருப்பதாக விஜய் குறிப்பிட்டிருக்கிறார். கூட்டணிக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று அவர் குறிப்பிட்டிருப்பது ஆளும் கட்சியின் தோழமைக் கட்சிகளைக் குறி வைத்துத்தான் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, வெறுப்புக்கு எதிரான செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் தனது சரளமான உரையில் குறிப்பிட்ட விஜய், தனது கட்சியின் பொருளாதாரக் கொள்கை குறித்து எதனையும் குறிப்பிடாதது சற்று ஏமாற்றமளித்தது என்றே சொல்லவேண்டும்.
தாராளமயம், தனியார் மயம், உலகமயம் போன்றவை குறித்த தனது நிலைப்பாடு என்ன, தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், விலைவாசி, அரசின் பணக்கொள்கை, தொழில்முனைவு சூழல் ஆகியவை குறித்து அவர் பேசுவார் என்று தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் பொதுவான அரசியல் பேச்சாக மட்டுமே அவரது உரை அமைந்துவிட்டது.இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, “விஜய், பா.ஜ.கவின் சி டீம்” என்று விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இனியாவது அவர் தனது பொருளாதாரக் கொள்கை, சித்தாந்தம் ஆகியவை குறித்துப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது பொருளாதாரப்பார்வை மத்திய அரசோடு ஒத்துப்போகிறதா, அல்லது தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒட்டிய நிலையை அவர் எடுப்பாரா என்பது பெருங்கேள்வியாக எழுகிறது.
அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இளைஞர்களாக இருப்பதை வைத்து யோசிக்கும்போது அவர்களைத் தொழில் முனைவோராக ஆக்குவதற்கும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது, தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவது ஆகியவை குறித்த எதிர்பார்ப்புகள் எழுவதும் மிக இயல்பானதுதான் இல்லையா!
(படம்: நன்றி: தமிழக வெற்றிக்கழக முகநூல் பக்கம்)